தேசிய செய்திகள்

தேச விரோத திட்டம்; என்.ஐ.ஏ. கைது செய்த நபர் அமெரிக்க கூலிப்படையை சேர்ந்தவரா? திடுக்கிடும் தகவல் வெளியீடு

போர் பகுதிகளில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, ஓர் அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் ஆயுத குழுக்களுக்கு பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

புதுடெல்லி

மிசோரம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது, மியான்மர் நாட்டு எல்லையை கடந்து சென்றது மற்றும் ஊடுருவல் குழுக்களுடன் தொடர்பில் இருந்து வந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் கைது செய்திருந்தது.

அவர்களில் 6 பேர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அமெரிக்கர். இதில், அமெரிக்கரான மேத்யூ வான்டைக் என பெயரிடப்பட்ட நபர், இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் என்.ஐ.ஏ. அவரை கைது செய்துள்ளது.

வடகிழக்கின் உள்ளேயும், அதனை சுற்றிலும், ஊடுருவல் குழுக்களுடன் சேர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, செயல்களை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று என்.ஐ.ஏ. சந்தேகம் தெரிவிக்கின்றது.

ஆவண பட இயக்குநர் என்றும் பாதுகாப்பு பகுப்பாய்வாளர், போர் செய்திகளை சேகரிப்பவர் என மேத்யூ கூறியபோதிலும், அவருடைய கடந்த கால செயல்கள் அதிர்ச்சியை தருகின்றன. கொரில்லா போர் பயிற்சி, எதிரி படைக்குள் நுழைதல், டிரோன் தாக்குதல் உள்ளிட்ட சிறப்பு படைகளுக்கான பயிற்சிகளை கடந்த காலத்தில் வழங்கி வந்திருக்கிறார். கூலிப்படை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

உலகளாவிய போர்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். 2011-ம் ஆண்டு லிபியா உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்கள் குழுக்களுடன் இணைந்து போரிட்டு இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டபோதும், பின்னர் தப்பி சென்றுள்ளார்.

போர் பகுதிகளில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, ஓர் அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் ஆயுத குழுக்களுக்கு பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவிலான நெட்வொர்க்குகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு அதிகாரிகளிடையே விசாரணையை தீவிரப்படுத்த உந்துதல் ஏற்படுத்தி உள்ளது. இதனால், உபா சட்டம் என்ற பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன.