தேசிய செய்திகள்

மும்பையில் 86.64 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி உற்பத்தி

மராட்டியத்தின் மும்பை நகரில் 86.64 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி உற்பத்தியாகி உள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் மராட்டியம் உள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்பு பற்றிய செரோ சர்வே ஒன்று நடத்தப்பட்டது. இதில், கடந்த ஆகஸ்டு 12ந்தேதி முதல் செப்டம்பர் 8ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 8,674 பேர் கலந்து கொண்டனர். இது 5வது சர்வே ஆகும்.

அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின்படி, முழு அளவிலோ அல்லது பகுதி அளவிலோ கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களிடம் 90.26 சதவீதம் ஆன்டிபாடிகளும், கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்களிடம் 79.86 சதவீதம் ஆன்டிபாடிகளும் உற்பத்தியாகி இருந்தன.

இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டவர்கள். 35 சதவீதத்தினர் தடுப்பூசி எதுவும் எடுத்து கொள்ளவில்லை. இதுபற்றி மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், மும்பைவாசிகள் இடையே 86.64 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி உற்பத்தியாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT