தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சின்கு பதானை காவலில் எடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாவூத் கூட்டாளி

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியும், கடத்தல் மன்னன் கரிம் லாலாவின் உறவினருமான சின்கு பதானை சமீபத்தில் நவிமும்பை, கன்சோலியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினா கைது செய்தனர்.

பின்னர் டோங்கிரி மற்றும் தென்மும்பையில் சில இடங்களில் சோதனை நடத்தி ரூ.2 கோடி ரொக்கம், துப்பாக்கிகள் மற்றும் அதிகளவில் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். தற்போது அவர் தானே மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சோகைல் (34), ஜிஜாசான் (32) ஆகிய 2 பேரை போதைப்பொருள் வழக்கில் கைது செய்து இருந்தனர். விசாரணையில், அந்த வழக்கில் சின்கு பதானுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அந்த வழக்கில் சின்கு பதானை கைது செய்து உள்ளனர். மேலும் ஜெயிலில் இருந்த அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோர்ட்டு அவரை 10-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கி உள்ளது.