புதுடெல்லி,
தமிழகத்தில் 2001-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் தி.மு.க. ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக பதவிவகித்த எ.வ.வேலு வருமானத்துக்கு அதிகமாக ரூ.26 லட்சத்து 30 ஆயிரம் சொத்து சேர்த்ததாக அவர், அவருடைய மனைவி ஜீவா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறி இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.