புதுடெல்லி,
18 - 44 வயது உள்ள பிரிவினருக்கு தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நாடி உள்ளன.
ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விநியோகம் செய்ய மறுத்துள்ளது. இந்தியாவின் மத்திய அரசிடம் மட்டுமே தடுப்பூசி தொடர்பாக எங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி வழங்க முடியும் என மாடர்னா, பைசர் போன்ற நிறுவனங்கள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை பெறுவது தொடர்பாக நாங்கள் பேசினோம்.
ஆனால், இரு நிறுவனங்களே எங்களிடம் தடுப்பூசிகளை விற்பனை செய்ய மறுத்துவிட்டன. இந்திய அரசிடம் மட்டுமே தங்கள் பரிவர்த்தனைகளை வைத்து கொள்வோம் என கூறிவிட்டன. தடுப்பூசிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.