விமானம் மூலம் கொண்டுவரப்படும்
இந்தியாவில் ஒருபுறம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மாநில அரசுகள் திண்டாடி வருகின்றன. இந்தநிலையில், நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ராணுவ அமைச்சக முதன்மை செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண்பாபு கூறியதாவது:-
ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இவை கொண்டுவரப்படும். இந்த ஆலைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ராணுவ ஆஸ்பத்திரிகளில் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலைகளை கொண்டுவர சரக்கு விமானத்தை தயார்நிலையில் வைத்திருக்குமாறு இந்திய விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார். இந்த ஆலைகள் எடுத்துச் செல்ல எளிதானவை என்பதுதான் இதன் சிறப்பம்சம் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு நடமாடும் ஆக்சிஜன் ஆலையும், நிமிடத்துக்கு 40 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மணிக்கு 2 ஆயிரத்து 400 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.
தேவைக்கேற்ப கூடுதலாக இத்தகைய ஆலைகள் கொண்டுவரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.