ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் சிந்திபெண்டி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அந்த கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கிராமத்திற்கு அருகே உள்ள ரென்ஜி வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாபுப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார். இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. காயமடைந்த பாதுகாப்புப்படை வீரர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.