கவுகாத்தி
அசாமில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. மே 20-ந்தேதி அசாம் அரசின் பதவி காலம் நிறைவடைகிறது.
இந்த சூழலில், 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபை தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, அசாமில் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்பட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 (புதன் கிழமை) மாலை 6.30 மணி வரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நடத்தவோ, பிரசுரிக்கவோ அல்லது அச்சு அல்ல மின்னணு ஊடகம் வழியே தகவல்களை வெளியிடவோ அல்லது வேறு எந்த வடிவிலோ அவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.