கவுகாத்தி,
அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ராமு பிரகாஷ் சவுகான் என்பவர் தான் ஒரு விஷ்ணு பக்தன் என்றும், தன் உடலில் கடவுள் விஷ்ணு இருப்பதாக கூறி அதன் மூலம் ஆசி வழங்கி தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் பிரசாரங்களை மேற்கொண்டார்.
இதனை நம்பி பலரும் அவரிடம் வந்து ஆசி பெற்று சென்றுள்ளனர். அவரிடன் வந்து ஆசி பெறுபவர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அருளாசி வழங்குவது அவரது வழக்கமாம்.
பெண் பக்தர்களுக்கும் இவ்வாறு தான் அவர் ஆசி வழங்குவார். ஆனாலும், அதனை பொருட்படுத்தாத ஏராளமான பெண்கள் பிரச்சனைகள் தீர்ந்தால் சரி என்று அவரிடம் வந்து ஆசி பெற்று சென்றுள்ளனர்.
இதன் மூலம் நோய்கள் தீருவதாகவும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதாகவும், மனதளவில் பாதிப்புகள் குறைவதாகவும் பக்தர்கள் நம்பினார்கள்.
நாளுக்கு நாள் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனை உள்ளூர் டி.வி. சேனல் ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியது. இதனையடுத்து போலி சாமியாரின் செயல் காட்டு தீ போல் பரவியது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மக்களை ஏமாற்றி இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர்.