அசாம்-மிசோரம் மோதல்
வடகிழக்கு மாநிலங்களான அசாம்-மிசோரம் இடையில் எல்லைப் பிரச்சினை உள்ளது. இந்நிலையில், இரு மாநில எல்லையில் கடந்த மாதம் 26-ந்தேதி ரத்தக்களறியான மோதல் நடைபெற்றது. அதில் அசாம் போலீசார் 6 பேர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மிசோரம் எம்.பி.க்கு சம்மன்
இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்ற ஒரு அசாம் போலீஸ் படை, அங்கு மிசோரம் எம்.பி. வன்லல்வேனாவின் வீட்டில் ஒரு சம்மனை ஒட்டியது. அதில், மிசோரமுக்குள் நுழைய முயன்றால் மேலும் பலரைக் கொல்வேன் என்று
வன்லல்வேனா தெரிவித்ததாக கூறப்படுவது பற்றிய விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்.பி. வன்லல்வேனா தவிர, மிசோரம் அரசைச் சேர்ந்த மேலும் 6 அதிகாரிகளுக்கும் அசாம் போலீஸ் சம்மன் வழங்கியது. மிசோரம் போலீசும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அசாம் அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
அசாம் முதல்-மந்திரி அறிவிப்பு
இந்நிலையில் ஹிமந்த பிஸ்வா நேற்று வெளிட்ட டுவிட்டர் பதிவுகளில், இரு மாநில எல்லைப் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க விரும்பும் மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்காவின் அறிவிப்பை வரவேற்பதாகவும், அந்த நல்லெண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மிசோரம் எம்.பி. வன்லல்வேனா மீதான வழக்கை திரும்பப் பெறும்படி அசாம் போலீசுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், மற்ற 6 மிசோரம் அதிகாரிகள் மீதான வழக்கு ரத்து செய்யப்படாது என்று அவர் கூறியுள்ளார்.
மோதல் பகுதியில் அமைதி
இந்நிலையில், அசாம்-மிசோரம் மாநிலத்தினர் இடையே மோதல் இடம்பெற்ற லைலாபூர் பகுதியில் தற்போது அமைதி நிலவிவருவதாகவும், அப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ரோந்து மேற்கொண்டு
வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.