தேசிய செய்திகள்

ஒடிசாவில் 100 ரூபாய் தர மறுத்த பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை

ஒடிசாவில் 100 ரூபாய் தர மறுத்ததற்காக சம்பல்பூர் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

ஜார்சுகுடா,

ஒடிசாவில் சம்பல்பூர் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தராக இருந்தவர் துருபா ராஜ் நாயக். ஓய்வுபெற்ற பின், தொலைவில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காக தனது வட்டாரத்தில், காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்ற பணிகளை செய்து வந்துள்ளார்.

சுற்றுச்சூழல் முன்னேற்ற பணிக்காக, அவருக்கு பிரகிருதி மித்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். இதுபற்றி ஜார்சுகுடா மாவட்ட எஸ்.பி. தாஸ் கூறும்போது, ராஜ் நாயக்கின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அவரிடம் 100 ரூபாய் கேட்டுள்ளான்.

ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கோடாரியால் அவரை வெட்டி விட்டு தப்பியோடி விட்டான். இதில், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி விசாரணை செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT