துமகூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கியாதசந்திரா அருகே அனுபவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்ப லதா (வயது 55). இவரது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு சுசித்ரா (33) என்ற மகள் உள்ளார். இவர் திருமணமாகி துமகூரு டவுனில் உள்ள ஸ்ரீநகரில் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சுசித்ரா ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்தார். அப்போது அந்த ஜோதிடர், உங்கள் தந்தையின் சாவுக்கு உங்கள் தாய் தான் காரணம். அவர் தான் மாந்திரீக பூஜை செய்து தந்தையை கொன்றுவிட்டார் என கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சுசித்ரா தாய் மீது ஆத்திரமடைந்தார். தனது தாயை பழிவாங்க முடிவு செய்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுசித்ரா தனது தாயின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது தாயிடம் ஜோதிடர் கூறியதை கேட்டு தகராறு செய்துள்ளார். அந்த சமயத்தில் பெற்ற தாய் என்றும் பார்க்காமல் சுசித்ரா, தலையணையால் புஷ்பலதாவின் முகத்தில் அழுத்தி மூச்சைத்திணறடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது தாய் மர்மமான முறையில் படுக்கையில் உயிரிழந்து கிடந்ததாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி நாடகமாடினார்.
மேலும் இறுதிச்சடங்கு நடத்த அவசரம் காட்டினார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சுசித்ராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது தந்தையின் சாவுக்கு தாய்தான் காரணம் என ஜோதிடர் கூறியதாகவும், அதனால் தாயை தலையணையால் மூச்சை திணறடித்து கொன்றதாகவும் சுசித்ரா கூறினார்.
இதையடுத்து போலீசார் சுசித்ரா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட ஜோதிடரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.