புனே,
மராட்டிய மாநிலம், நான்டெட் மாவட்டத்தில் கெரூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் பாண்டுரங் கோண்டுமங்கள் (வயது 28) என்பவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார்.
அவருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர். 2 குழந்தைகள் பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறையால், ஒரு குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார். இதனால் பிராச்சி (வயது 6) என்ற பெயர் கொண்ட அவருடைய மகளை வண்டியில் ஏற்றி கொண்டு தெலுங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்திற்கு சென்று கால்வாயில் தள்ளி விட்டு வந்துள்ளார். இதில் நீரில் மூழ்கி பிராச்சி பலியாகி விட்டாள்.
இதுபற்றிய தகவல் அறிந்து பிராச்சியின் உடலை போலீசார் கைப்பற்றினர். பாண்டுரங்கிடம் விசாரித்தபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சிகிச்சை பெற்று வருகிறது என்றும் கூறியிருக்கிறார். தீவிர விசாரணையில் அவர் உண்மையை கூறியுள்ளார்.
இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக, விதிகளின்படி 2 குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதற்காக இரட்டை சகோதரிகளில் ஒரு குழந்தையை அவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.