சிக்கமகளூரு-
அரசு பஸ் நிலையத்துக்குள் கார் வரக்கூடாது என்று கூறியதால் அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண் ஊழியர் மீது தாக்குதல்
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் டவுனில் அரசு பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் நேத்ராவதி என்பவர் நேர கட்டுப்பாட்டாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நேத்ராவதி, இரியூர் பஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது பஸ் நிலையத்துக்குள் கார்கள் வந்தன. இதனை பார்த்த நேத்ராவதி, அரசு பஸ் நிலையத்துக்குள் கார்கள் வர அனுமதி கிடையாது என கூறி, அவற்றை திருப்பி அனுப்பினார்.
மேலும் கார்களை பஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார். அப்போது ஒரு காரில் வந்த நபர், நேத்ராவதியுடன் தகராறு செய்தார். திடீரென்று அந்த நபர் காரில் இருந்து இறங்கி வந்து, நேத்ராவதியை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அவரை தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதில் நேத்ராவதி தலையில் பலத்த காயம் அடைந்தார்.
வாலிபருக்கு வலைவீச்சு
இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து நேத்ராவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நேத்ராவதி, இரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, நேத்ராவதியை தாக்கியது இரியூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 35) என்பது தெரியவந்தது. அவர் உறவினரை பஸ் ஏற்றி விடுவதற்காக காரில் வந்தபோது, நேத்ராவதியுடன் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியது தெரியவந்தது. இதற்கிடையே சுப்பிரமணி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.