அகர்தலா,
திரிபுராவில் முதல்-மந்திரி பிப்லப் தலைமையில் பா.ஜ.க. பொது கூட்டம் இன்று நடந்தது. தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர். இந்த நிலையில், அவர்கள் மீது வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், மேற்கு திரிபுராவின் கூடுதல் எஸ்.பி. பி.ஜே. ரெட்டி கூறும்போது, திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி சாயோனி கோஷ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதுபற்றிய முதற்கட்ட சான்று கிடைத்து உள்ளது. இதனால், கோஷ் மீது 307, 153 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அகர்தலா போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
இந்நிலையில், திரிபுராவில் போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர் என கூறி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் சுகேந்து ராய், கல்யாண் பானர்ஜி மற்றும் தோலா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், திரிபுராவின் பகவான் தாக்குர் சவுமுனி பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுபல் பவுமிக் வீடு மீது தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து திரிபுரா போலீசார் மற்றும் ரைபிள் படை பிரிவினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.