புதுடெல்லி,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்கள், வன்முறை ஆகியவை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், இதுகுறித்து சமீபத்தில் தேசிய குற்ற ஆவணக்காப்பு மையத்துடன் ஆலோசனை நடத்தி பிரஸ் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அக்கடிதத்தில், ஏற்கனவே தேசிய குற்ற ஆவணக்காப்பு மையம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றது. இதுதவிர தற்போது பத்திரிகையாளர்கள் கொல்லப்படுதல், பத்திரிகையாளர்களுக்கு எதிரான கொலை முயற்சிகள், தாக்குதல்கள், மிரட்டல்கள் ஆகியவை குறித்தும் தகவல்களை சேகரிக்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக பதியப்படும் வழக்குகள், கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, வழக்குகளை முடித்து வைத்தல் உள்ளிட்ட தகவல்களும் இந்த ஆண்டில் இருந்து சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.