தேசிய செய்திகள்

ஆகஸ்டு மாதம் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பருவமழை பெய்துள்ளது - வானிலை ஆராய்ச்சி துறை தகவல்

ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பருவமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் செப்டம்பர் மாதத்திற்கான மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா, மழை நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

கடந்த ஜூன் மாதம் இயல்பை விட 10 சதவீதம் அதிகமாகவும், ஜூலை மாதத்தில் இயல்பை விட 7 சதவீதம் குறைவாகவும், ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவும் பருவமழை பெய்துள்ளது. நடப்பு செப்டம்பர் மாதத்தில், இயல்பை விட அதிகமாக மழை பெய்யும். நாட்டின் மத்திய பகுதிகளில் இயல்பான அளவிலோ அல்லது அதற்கு மேலோ மழைப்பொழிவு இருக்கும். தற்போதைய நிலையில், பருவமழை பற்றாக்குறை 9 சதவீதமாக உள்ளது. ஆனால், செப்டம்பர் மாதம் பெய்யும் கனமழை, இதை ஈடு செய்துவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.