அயோத்தி,
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை அடுத்து அங்கு 5 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மசூதி கட்டப்பட உள்ளது. இந்த மசூதி ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் அமர்ந்து தொழுகை நடத்தும் வசதியுடன் அமையும். இந்த மசூதி கட்டும் பணியை இந்தோ இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை கவனிக்கிறது.
அடுத்த மாதம் 26-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ள இந்த மசூதியின் மாதிரி வரைபடம் கடந்த சனிக்கிழமையன்று லக்னோவில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் ஜாபர்யாப் ஜிலானி, கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதியானது வக்பு சட்டத்துக்கு எதிரானது, ஷரியத் சட்டத்துக்கு விரோதமானது என கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு இந்தோ இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை செயலாளர் அதார் உசேன் பதில் அளிக்கையில், ஒவ்வொருவரும் ஷரியத் சட்டத்தை தங்கள் சொந்த வழியில் விளக்குகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்கீழ் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போது அது சட்ட விரோதமானது அல்ல என குறிப்பிட்டார்.