தேசிய செய்திகள்

இடைநீக்கம் செய்யப்பட்ட கேரள டி.ஜி.பி.க்கு மீண்டும் பணி - மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு

இடைநீக்கம் செய்யப்பட்ட கேரள டி.ஜி.பி.க்கு மீண்டும் பணி வழங்குமாறு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கொச்சி,

கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த ஜேக்கப் தாமஸ், ஓராண்டுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசின் பல்வேறு மட்டங்களில் ஊழல் நிலவுவதாக புத்தகம் எழுதியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஜேக்கப் தாமஸ் வழக்கு தொடர்ந்தார். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, தொடர்ச்சியாக இடைநீக்கத்தில் இருப்பது சரியல்ல என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஜேக்கப் தாமஸை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கேரள மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தாமஸ் கூறுகையில், நான் அரசியல் கட்சிகளின் பழிவாங்கும் செயலால் பாதிக்கப்பட்டவன். இந்த உத்தரவால் எனக்கு நீதி கிடைத்துள்ளது என்றார்.