கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் ஷிகெல்லா என்ற பாக்டீரியா வகை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளான். பாக்டீரியா குடும்பத்தின் ஒரு வகையை சேர்ந்த இந்த ஷிகெல்லா மனிதனின் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் டயோரியா எனப்படும் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும்.
உலகம் முழுவதும் இந்த பாக்டீரியாக்களின் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளான். இதேபோன்று 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
அவர்களில் பலர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். 6 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோழிக்கோடின் கொட்டபரம்பு வார்டு பகுதியில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 2 குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளது. அதனால் அவர்கள் கோழிக்கோடில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி தொற்று நோய்களுக்கான மாநில சுகாதார அதிகாரி அமர் பெட்டில் கூறும்பொழுது, மனித கழிவுகளால் பாதிக்கப்பட கூடிய நீர் மற்றும் உணவு வழியாக ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பரவ கூடும்.
இந்த தொற்று நோயை சிகிச்சை அளித்து குணமடைய செய்யலாம். அதற்கான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளன. முறையான சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் அந்த பகுதியிலுள்ள கிணறுகளில் குளோரின் கலந்து சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர். ஓட்டல்கள் உள்ளிட்ட உணவு விடுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விழிப்புணர்வு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கேரளாவில் சமீப காலங்களாக கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் அவதிப்படும் சூழலில் பாக்டீரியா தொற்றும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.