புதுடெல்லி,
டெல்லியின் பாவனா பகுதியில் இரண்டடுக்கு கட்டிடம் ஒன்றில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. கடந்த ஜனவரி 20ந்தேதி அதன் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மொத்த கட்டிடமும் எரிந்து போனது.
இந்த தீ விபத்தில் 10 பெண்கள் உள்பட 17 பேர் பலியாகினர். ஆண் மற்றும் பெண் என 2 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் மனோஜ் ஜெயின் மற்றும் இணை உரிமையாளர் லலித் கோயல் மற்றும் 5 பேர் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது 800 பக்க குற்றச்சாட்டு அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இதில் சுர்ஜீத் கோயல், கிரீஷ் ரத்தோர், சங்கீதா விஜய் யாதவ், உமா மிட்டல் மற்றும் பிரிஜ் பூஷண் சூட் ஆகியோர் மற்ற 5 பேர் ஆவர். இவர்கள் அனைவருக்கும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு உள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் ஏப்ரல் 4ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.