புதுடெல்லி,
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார் கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிக்கிறார்கள். இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இடங்களில் உற்பத்தி நடைமுறைகளில் குறைபாடுகள் இருப்பதை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்தது.
இதனால் தனது அமைப்புகள் இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு எழுப்பிய பிரச்சினையை பாரத் பயோடெக் நிறுவனத்தார் சரிசெய்யுமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம், கொரோனா தடுப்பூசி தொடர்பாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் வி.கே. பாலுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது.
அந்தக் கடிதத்தில், இந்தப் பிரச்சினையை பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் மூலம் சரி செய்து, உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு அனுமதி பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.