பாட்னா,
திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா பீகாரின் கயா நகரில் வருகிற 29-ந்தேதி தொடங்கி 3 நாட்களுக்கு புனித போதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக காலசக்கரா கற்பித்தல் மைதானம் தயாராகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் 50 நாடுகளை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தலாய் லாமா புத்தகயா நகருக்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், பீகாரில் கயா விமான நிலையத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகளுக்கு நடந்த ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் 3 பேர் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள். ஒருவர் மியான்மரை சேர்ந்தவர். இந்த பரிசோதனையை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, அவர்கள் 4 பேரும் புத்தகயா நகரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.