பாட்னா
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார் சபி (20). சலவைத் தொழிலாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவரை மானபங்கப் படுத்தினார். அவரை பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார். இதையடுத்து லாகஹா போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் கோரி, அவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நிதிபதி அவினாஷ் குமார் அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார்.
அதாவது, குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேலைகளையும் இலவசமாக குமார் ஆறு மாதத்துக்கு சலவை செய்ய வேண்டும். பின்னர் அதை அயர்ன் செய்து ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்க வேண்டும். இதைக் கண்காணித்து ஊர் பஞ்சாயத்துத் தலைவர் நஜிமா நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அவர் இதை செய்யவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் பஞ்சாயத்து தலைவர் தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வித்தியாசமான தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தீர்ப்பை அளித்தவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசனஸ் நீதிபதி அவினாஷ்குமார். இவர் ஏற்கனவே இது போன்ற சில தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பாட்னா ஐகோர்ட் நிர்வாகம் ஒரு உத்தரவை வழங்கி உள்ளது மறு உத்தரவு வரும் வரை நீதி மன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பீகார் ஐகோர்ட்டு நீதிமன்ற நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.