கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

பீகார் வாக்காளர் பட்டியல்: சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில், பீகாரில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும். அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து பீகார் வாக்காளர் பட்டியலில் தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடர்ந்தனர். அவற்றை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அமர்வு விசாரித்து வருகிறது.

இதில் கடந்த 1-ந் தேதி விசாரணையின்போது, தேர்தல் கமிஷன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஏராளமான அதிருப்தி இருப்பதற்கு கவலை வெளியிட்டிருந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தனர். அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை 8-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்திருந்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.