மேற்கு வங்காள மாநிலம் கோக்பெகார் தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிதிஷ் பிரமநாயக்கிற்கு எதிராக 11 கிரிமினல் வழக்குகள் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரோதமான செயலில் ஈடுபட்டதாக வெளியேற்றப்பட்டவர். இப்போது பா.ஜனதாவில் சேர்ந்து சீட் பெற்றுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ததில் 11 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 27-ம் தேதியும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை, கொலை முயற்சி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகள் அவருக்கு எதிராக உள்ளது. இப்போது அவரை கைது செய்ய வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கிரிமினல் செயல் காரணமாக நாங்கள் வெளியேற்றிய நபரை, பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தியுள்ளது என திரிணாமுல் விமர்சனம் செய்துள்ளது. பா.ஜனதா அடிமட்ட தொண்டர்களும் பிரமநாயக்கிற்கு எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.