லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் மற்றும் பூல்பூர் தொகுதியில் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் பதவி விலகினர். யோகி உத்தர பிரதேச முதல் அமைச்சராகவும் மற்றும் கேசவ் துணை முதல் அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.
இதனை தொடர்ந்து கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ந்தேதி நடந்து முடிந்தது. கோரக்பூரில் 47.45 சதவீதமும், பூல்பூரில் 37.39 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
இந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து கோரக்பூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் பாரதீய ஜனதாவின் வேட்பாளர் உபேந்திரா தத் சுக்லா 800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் பிரவீன் நிஷாத் 2வது இடத்தில் உள்ளார்.
இதேபோன்று பூல்பூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் 3ம் சுற்று முடிவில் பாரதீய ஜனதாவின் எதிரியான சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் நாகேந்திர சிங் 1,300 வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளார்.