கோண்டா ( உ.பி),
உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உத்தரபிரதேச பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குரைக்கும் நாய் என்ற பொருள் படும் வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து இருப்பது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழில் அதிபர் நிரவ் மோடி 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய எம்.பி பிரிஜ் பூஷன் சரண், நாய்கள் குரைக்கும், ஆனால், யானை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் என்று சொல்லப்படுவது உண்டு. அதேபோல், பிரதமர் மோடி நாட்டுக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறார். எனவே, குரைக்க விரும்புவர்கள் தொடர்ந்து குரைக்கட்டும் என்றார்.