திசை திருப்ப முயற்சி
மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நாக்பூரில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராக உள்ளது. எனினும் பா.ஜனதா நாடகம் நடத்தி, நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது. பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது, நாட்டை காப்பாற்ற விரும்புவார்கள். ஆட்சியில் இருக்கும் போது, தங்களை காப்பாற்ற நினைப்பார்கள். அவர்களின் இதுபோன்ற சிந்தனையை மக்கள் புரிந்து கொண்டார்கள். எனவே வர இருக்கும் மாநில தேர்தல்களில் மாற்றம் ஏற்படும்.
விசாரணை
பாதுகாப்பு குளறுபடியால் நாடும், காங்கிரசும் 2 பிரதமர்களை இழந்துவிட்டதாக ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். எனவே பிரதமர் மோடி பாதுகாப்பு பிரச்சினையை நாங்கள் தீவிரமாக பார்க்கிறோம். அரசியல் ரீதியாக அதை பார்க்கவில்லை.
ஆனால் ஜனவரி 5-ந் தேதி பெரோஸ்பூர் மேம்பாலத்தில் போராட்டம் காரணமாக பிரதமரின் பாதுகாப்பு வாகனம் சிக்கி கொண்டது. எனவே அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிட்டார். இதை எந்த வகையில் பெரிய பாதுகாப்பு குளறுபடி என மத்திய உள்துறை கூறுகிறது?.
பிரதமரின் பயண வழித்தடம் கடைசி நேரத்தில் மத்திய உள்துறையால் மாற்றப்படுகிறது. அவரின் வாகனம் சிக்கிய இடத்திற்கு பா.ஜனதா ஆதரவாளர்கள் எப்படி சென்றார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.