புதுடெல்லி,
புதுடெல்லியில் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் உயர்மட்ட அளவிலான மந்திரிகளுடனான 28வது ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வழியே இன்று நடந்தது.
இதில், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.
நோய் பாதித்தவர்களில் 86 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பும், 62.3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பும் உள்ளது.
நாட்டில் அதிக அளவாக மராட்டியம் (6,339) கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இதனை தொடர்ந்து குஜராத் (5,486) 2வது இடத்தில் உள்ளது.
நாட்டில் 23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு 141 நாட்கள் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன. இது உலகளவில் 2ம் இடம் ஆகும். அமெரிக்கா இந்த எண்ணிக்கையை அடைய 134 நாட்கள் எடுத்து கொண்டது என கூறியுள்ளார்.