மும்பை,
இந்தி திரைப்பட நடிகர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் பாட்னா தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சத்ருகன் சின்ஹா. இவர் பிரதமர் மோடிக்கு எதிராக சில விசயங்களில் பேசி வந்துள்ளார். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு முதல் சட்டாரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு வரை அவர் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தனது கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார்.
சத்ருகன் சின்ஹாவின் பங்களா ஒன்று ஜுஹுவில் அமைந்துள்ளது. ராமாயணா என்ற பெயரிடப்பட்ட அந்த பங்களாவின் இரண்டு கழிவறைகள் மற்றும் பங்களாவின் ஒரு சில பகுதிகள் இன்று மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்டன.
இதுபற்றி சத்ருகன் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், யஷ்வந்த் சின்ஹாவில் இருந்து சட்டாரா விவசாயிகள் வரை ஆதரவு தெரிவித்ததற்காக மற்றும் நேர்மையான அரசியலுக்காக உங்களுக்கு கிடைத்த பரிசு இதுவா? என சிலர் என்னிடம் கேட்கின்றனர். என்னிடம் பதில் இல்லை.
டெல்லியில் எனது பாதுகாப்பு வளையம் நீக்கப்பட்டது. அதில் தொடங்கி இப்பொழுது எனது வீடு இடித்து தள்ளப்பட்டுள்ளது. நான் அதிகாரிகளுக்கு இடையூறு செய்யாமல் ஒத்துழைத்தேன்.
எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள்… கவலை கொள்ள வேண்டாம், மகிழ்ச்சியுடன் இருங்கள். மீண்டும் புதுவருட வாழ்த்துகள்! ஜெய்ஹிந்த்! என தெரிவித்துள்ளார்.
மும்பையில் கமலா மில்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து சட்டவிரோத முறையில் கட்டப்பட்ட பகுதியை இடிப்பது என்ற கடுமையான நடவடிக்கையில் மும்பை மாநகராட்சி இறங்கியுள்ளது. அந்த அடிப்படையில் சத்ருகன் சின்ஹாவின் பங்களாவின் ஒரு பகுதியை இடிப்பது என்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.
#ShatrughanSinha #NarendraModi