தேசிய செய்திகள்

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்பு

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துக்கு உட்பட்ட அர்வானி கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை நேற்று காலையில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர்இதொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தளபதியாக செயல்பட்டு வந்த ஜுனைத் மாத்தூ கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சபல் நகரில் நேற்று மாலையில் போலீசார் ஒரு ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள் சிலர், போலீசார் மீது தாக்குதல் தொடுத்தனர். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் நிலைகுலைந்தனர். பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் ஒரு சப்இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைத் தெடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தெய்பாவின் உள்ளூர் தலைவரான ஜூனைத் மட்டூ கொல்லப்பட்டார்.ஜூனைத்துடன் அடில் முஷ்தக் மிர் (18) மற்றும் நிசர் அகமத் வானி (20) என்ற இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் இன்று மீட்கப்பட்டது. என்கவுண்டர் நடைபெற்ற அர்வானி கிராமத்தில் பயங்கரவாதிகளின் உடல்களை மீட்டனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் இன்று பிரிவினைவாதிகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதால் அப்பகுதியில் இன்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரெயின்வாரி, கன்யார், நவ்ஹட்டா, எம்.ஆர்.கன்ச் சபா கடல் ஆகியபகுதிகளில் சட்டம் ஒழுங்கை பேண ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.