தேசிய செய்திகள்

போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறை - பா.ஜனதா அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறை நடத்தியுள்ளதாக, பா.ஜனதா அரசு மீது பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது:-

அம்பேத்கரின் அரசியல் சட்டத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்த தாக்குதலை எதிர்த்து மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் பா.ஜனதா அரசு போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறை மற்றும் வன்முறையை கையாள்கிறது. பா.ஜனதா அரசு பண மதிப்பு இழப்பின்போது மக்களை வரிசையில் நிற்கவைத்தது. இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்தம் என்ற பெயரில் மக்களை வரிசையில் நிற்கவைக்கிறது.

குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து, அதற்குள் ஒவ்வொரு இந்தியரும் உரிய ஆவணங்களுடன் தாங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டும். இது ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு தொந்தரவை கொடுக்கும். மாணவர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.