தேசிய செய்திகள்

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதாக எடியூரப்பா பேட்டி

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமார சாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன.

இதையடுத்து குமார சாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட கவர்னர், புதிய அரசு அமையும் வரை முதல்-மந்திரி (பொறுப்பு) பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் புதிய அரசை அமைக்கும் பணியில் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கினர்.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, இன்று காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவையும் இன்றே நடத்த வேண்டும் என்றும் ஆளுநரிடம் கேட்க இருப்பதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT