தேசிய செய்திகள்

சாலையோரம் சிறுநீர் கழித்த பா.ஜனதா மந்திரி

ராஜஸ்தானில் சாலையோரம் சிறுநீர் கழித்த பா.ஜனதா மந்திரி காங்கிரஸ் கடும் கண்டனம்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் காளிசரண் சரப். இவர் ஜெய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையோரம் காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். கார் நின்றவுடன் அதில் இருந்து இறங்கிய அவர் சாலை ஓரத்தில் ஒரு சுவர் ஓரமாக நின்று சிறுநீர் கழித்தார். மந்திரி சிறுநீர் கழிப்பதை யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஜெய்ப்பூரில் சாலையோரத்தில் சிறுநீர் கழித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜெய்ப்பூர் நகரம் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மந்திரி காளிசரண் சரப் சாலையோரத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார இலாகாவுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் இப்படி நடந்து கொண்டது அநாகரீகமானது என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி மந்திரி காளிசரண் சரப் கூறுகையில், இது ஒரு பெரியவிஷயமே அல்ல. இதை ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள், இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.

SCROLL FOR NEXT