தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

அப்போது கூறியதாவது:-

காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் . தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை நாடாளுமன்றமே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது, நீதிமன்றம் தலையிட முடியாது . இரு மாநில நதி நீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும்.


காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் முடிவிற்கு கட்டுப்பட்டது. தீர்ப்பாய தீர்ப்பு அளிதிருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த தயாராக இருக்கின்றோம் என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.


காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மத்திய அரசை தமிழக அரசு குற்றம் சாட்டியது.

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும். 2013 ஆம் ஆண்டு அரசாணை பிறபித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஏன்? என சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.


காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்து உள்ளது.