புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்று வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 15-ம் தேதிப்பின் சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.
இதனால், மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது. மேலும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்துக்களைக் கேட்டறிந்தார். கடந்த 22-ம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் பொக்ரியால் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அமைச்சர் பொக்ரியால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. பிப்ரவரி 2021-க்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும்.
பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு எழுத்து முறையிலேயே நடத்தப்படும். ஆன்லைன் மூலம் நடத்தப்படுவது சாத்தியமாகாது அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியப்படாது. 30 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் சிபிஎஸ்இ தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.