பெங்களூரு,
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் ரமேஷ் ஜார்கிகோளி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்பொழுது, இளம்பெண் ஆடியோ உரையாடல் வெளியாகியுள்ளது. அதில் அவர் அந்த சி.டி. போலியானது, திருத்தப்பட்டது என்று கூறியுள்ளார். அதை தான் நான் கூறுகிறேன்.
ஆடியோவில் டி.கே.சிவக்குமாரின் பெயரை அந்த பெண் கூறியுள்ளார். அவர் எனது பழைய நண்பர். அவருக்கு நல்லது நடக்கட்டும். இதற்காக அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம்.
இந்த வழக்கில் நான் நிரபராதி. நாளை (அதாவது இன்று) மாலை 4 முதல் 6 மணிக்குள் இதை விட பெரிய தகவலை வெளியிடுவேன். அதுவரை பொறுத்திருங்கள். நான் ஜாமீன் வாங்க மாட்டேன். அந்த தவறை செய்ய மாட்டேன். கஷ்டம், சுகத்தில் நானும், டி.கே. சிவக்குமாரும் கூடி வாழ்ந்துள்ளோம். என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் குற்றவாளி அல்ல என கூறினார்.
இந்த நிலையில், ரமேஷ் ஜார்கிகோளியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் இன்று கூறும்பொழுது, இளம்பெண்ணை நான் சந்திக்கவேயில்லை. ரமேஷ் ஜார்கிகோளி கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என விளக்கம் அளித்து உள்ளார்.
ரமேஷ் ஜார்கிகோளி எனக்கு குட்லக் கூறுகிறார். நான் அவருக்கு குட்லக் கூறுகிறேன். அந்த பெண்ணை சந்திக்கவில்லை. அவரும் என்னை சந்திக்கவில்லை என மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன்.
ரமேஷ் ஜார்கிகோளி எது வேண்டுமென்றாலும் வெளியிடட்டும். அவருக்கு குட்லக் தெரிவித்து கொள்கிறேன். அவர்களது உரையாடலில் எனது பெயரை ஏன் அவர்கள் எடுத்துள்ளனர் என எனக்கு தெரியவில்லை.
அந்த சி.டி.யில் உள்ள பெண், அவரது தனிப்பட்ட விவகாரம் பற்றி என்னை சந்தித்து என்னிடம் கூற முயன்றிருக்கலாம். ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை. பாதுகாப்பிற்காக அவர் வேறு யாரையேனும் சந்தித்திருக்கலாம் என்று டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.