தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

கொரோனா நெருக்கடியைச் சமாளிப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் செய்துவருகின்றன என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஆஸ்பத்திரியை, இந்த தொகுதி எம்.பி.யான ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளை கையாளுவதில் உத்தரபிரதேச அரசு காட்டும் வேகத்தைப் பாராட்ட வேண்டும். எவரும் தவறுகள் புரிய நேரலாம். செயல்படுவோர்தான் தவறுகள் புரிவர். ஆனால் இது விமர்சனத்துக்கான நேரமல்ல. யாரும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால், ஆலோசனைகள் கூறினால் அவற்றை ஏற்க மாநில அரசு தயாராகவே உள்ளது.

கொரோனா விஷயத்தில் உத்தரபிரதேச அரசின் செயல்பாட்டை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. அது சாதாரண விஷயமல்ல.

பிரதமர் நரேந்திர மோடி இந்த கொரோனா தொற்றை ஒரு சவாலாக ஏற்றுச் செயல்பட்டு வருகிறார். கொரோனா நெருக்கடியைச் சமாளிப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் செய்கின்றன.

பல நாடுகளுடன் பிரதமர் நல்லுறவைப் பேணியதால்தான் தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவை இந்தியாவுக்கு உதவி வருகின்றன. கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.