உச்சவரம்பு
இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம், இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச காரணங்களால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தபடியே இருக்கிறது. 46 சதவீதம்வரை உயர்ந்து விட்டது. எனவே, விலையை கட்டுப்படுத்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை இது அமலில் இருக்கும்.
விலக்கு
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், அங்குள்ள இருப்பு மற்றும் பயன்பாட்டை அடிப்படையாக வைத்து, எவ்வளவு இருப்பு வைப்பது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளது. இருப்பினும், சிலவகையான ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு இந்த உச்சவரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விலை குறையும்
எந்த வியாபாரியாவது, உச்சவரம்புக்கு மேல் இருப்பு வைத்திருந்தால், மிகுதியாக உள்ள சமையல் எண்ணெய் விவரத்த மத்திய உணவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிப்பதுடன், உரிய காலத்துக்குள் உச்சவரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடுகு எண்ணெய் மீதான யூக வணிகம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுகளால், உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையும், பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்று மத்திய உணவு அமைச்சகம் கூறியுள்ளது.