முன்னாள் பீகார் முதல் மந்திரியான லாலுவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இனி வழங்கப்படும். அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய வீரர் ஒருவர் பாதுகாப்பிற்கு செல்வார்.
சமீபத்தில், பல்வேறு வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் அளவினை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. அதன்பின்னர் இந்த முடிவானது எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மன்ஜிக்கு வழங்கி வந்த இசட் பிளஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் லாலு பிரசாத்தின் மகனான தேஜ் பிரதாப் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, லாலுவிற்கு எதிராக மத்திய அரசு கொலை திட்டம் தீட்டுகிறது. லாலு பிரசாத் கொல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? அவர் உடல் ரீதியாக தாக்கப்பட்டால் அந்த குற்றம் பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா மீது விழும் என கூறினார்.
லாலுவின் இளைய மகனான தேஜஸ்வி யாதவ், எதிரணியில் செயல்படும் லாலுவின் பாதுகாப்பினை குறைத்து அவரை மிரட்ட மத்திய அரசு முயற்சிக்கின்றது. இது பாரதீய ஜனதா தலைமையிலான அரசின் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலாக உள்ளது என கூறியுள்ளார்.