தேசிய செய்திகள்

இ்ந்தியாவில் உள்ள குழந்தைகளை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை- மனிஷ் சிசோடியா விமர்சனம்

சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், சிங்கப்பூரில் ஒரு புதிய உருமாறிய கொரோனா உருவாகியுள்ளது. அது குழந்தைகளுக்கு ஆபத்தானது. எனவே, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகளை மோடி அரசு உடனே நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

அவரது கருத்து, இந்தியா-சிங்கப்பூர் உறவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூருக்கான இந்திய தூதரை சிங்கப்பூர் அரசு நேரில் அழைத்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துகளுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அதற்கு இந்திய தூதர், உருமாறிய கொரோனா பற்றியோ, சிவில் விமான போக்குவரத்து கொள்கை பற்றியோ அறிவிப்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிகாரம் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

மேலும், சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் கூறுகையில், சிங்கப்பூர் உருமாறிய கொரோனா என்ற ஒன்றே கிடையாது. அரசியல்வாதிகள் உண்மையை உணர்ந்து பேசவேண்டும் என்றார். இந்தநிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய அரசின் கண்டனங்களுக்கு டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசும், பா.ஜனதாவும் கூறுவதை பார்த்தால், அவர்கள் சிங்கப்பூரில் தங்களது கவுரவத்தை பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். இ்ந்தியாவில் உள்ள குழந்தைகளை பற்றி கவலைப்படவில்லை. மலிவான அரசியல் நடத்துகிறார்கள்.

இப்படித்தான் லண்டன் உருமாறிய கொரோனா பற்றி விஞ்ஞானிகளும், டாக்டர்களும் உஷார்படுத்தியபோது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதுதான் பெருமளவிலான கொரோனா மரணங்களுக்கு காரணமாகி விட்டது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.