தேசிய செய்திகள்

அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 14 ஆம் தேதி(நாளை) காலை தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அருகிலுள்ள லட்சத்தீவுப் பகுதி வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரமடையும்.

அதனை தொடர்ந்து வரும் மே 16 ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக தீவிரமடைந்து வடக்கு-வடமேற்கு திசை நோக்கி செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மே 14 ஆம் தேதி தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், மே 15 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமான முதல் மிக அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.