புதுடெல்லி,
நாடு முழுவதும் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலவரம் குறித்து மத்திய சுகாதார துறை இணை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, உலகளவில் 159 நாடுகளில் ஒமைக்ரான் பரவல் உச்சமடைந்துள்ளது. 8 ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2 வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் உயர்ந்துள்ளது.
ஜனவரி 12 நிலவரப்படி 9.55 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் விகிதம் 11.05% ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 300 மாவட்டங்களில் இந்த விகிதம் 5% அதிகமாக இருக்கிறது.
மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உ.பி., கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இப்போது கவலைக்குரிய மாநிலங்களாக மாறிவிட்டன. அங்கு தினமும் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளதே அதற்கு காரணம். பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு குணமடைந்தோர் வீடுகளுக்கு திரும்பும் கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம்.
இதன்படி, ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் 93% ஆக்சிஜனை அடைந்தவுடன் மூன்று நாள்களுக்கு பிறகு வீட்டிற்கு செல்லலாம். லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவோர் தொற்று உறுதி செய்யப்பட்டு 7வது நாள் வீடு திரும்பலாம் என்று கூறியுள்ளார்.