புதுடெல்லி,
தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், 'தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர். இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி தினமும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சத்ரபதி சிவாஜி குறித்தும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், 'சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் ஜெயந்தி அன்று அவருக்கு தலைவணங்குகிறேன்.
அவரது சிறந்த தலைமைத்துவமும் சமூக நலனுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும் தலைமுறை தலைமுறையாக மக்களை ஊக்குவிக்கிறது. உண்மை மற்றும் நீதியின் மதிப்புகளுக்காக நிற்கும் போது அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவருடைய கனவை நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.