சத்தீஷ்கர்,
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இன்னமும் மருத்துவ உதவிகளை பெறுவதற்கு நகரங்களில் உள்ள ஆம்புலன்ஸ் சேவையை எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்தும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் சத்தீஸ்கரில் கோர்பா மாவட்டத்தின் காட்கோரா பகுதியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், போலீசார் ஆம்புலன்ஸை சோதனை செய்தனர்.
அப்போது ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் ஆயிரம் கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
ஆம்புலன்ஸ்கள் கிடைக்காததால் மக்கள் இறக்கும் சம்பவங்கள் மற்றும் தாமதமான சிகிச்சையால் பாதிக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் மக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.