புதுடெல்லி,
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் இந்தியா நிர்வகிக்கும் பகுதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்திய நிர்வாக காஷ்மீர் என்று குறிப்பிட்டது பெரும் சலசலப்பை கிளப்பியது. இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், அமெரிக்கா காஷ்மீரை பற்றி குறிப்பிட்டதை இந்தியா எப்படி ஏற்றுக்கொண்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் சிதம்பரம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
முன்னதாக கடந்த திங்கள் கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தலைவரான சையது சலாஹுதினை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இது தொடர்பான அறிவிக்கையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பல தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு இந்திய நிர்வகிக்கும் ஜம்மு காஷ்மீரில் 17 பேர் காயம் அடைந்த பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என தெரிவித்து இருந்தது.