தேசிய செய்திகள்

திரையரங்குகளில் நாளை முதல் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி

திரையரங்குகளில் நாளை முதல் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கியதையடுத்து பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திரையரங்குகளில் நாளை முதல் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கூடுதல் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும். திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.