மும்பை,
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) வெளியீட்டு நிகழ்ச்சி, மும்பையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
திரையிலும் சரி, திரைக்கு பின்னாலும் சரி, நடிகர் அமிதாப்பச்சன்தான் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். அவர் பின்பற்றி வருகிற 3 விஷயங்களை அவர் எனக்கு அறிவுரையாக கூறினார்.
முதல் விஷயம், அன்றாடம் உடற்பயிற்சி செய் என்று சொன்னார். இரண்டாவது விஷயம், எப்போதும் வேலை செய்து கொண்டிரு. நீ விரும்புவதை எல்லாம் செய், மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாதே என்று கூறினார்.
மூன்றாவது விஷயம், அரசியலில் நுழையாதே என்று கூறினார்.
அவர் கூறிய முதல் இரண்டு அறிவுரைகளை நான் பின்பற்றி வருகிறேன். ஆனால், மூன்றாவது அறிவுரையை சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக என்னால் பின்பற்ற முடியவில்லை. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, ரஜினிகாந்திடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது:-
கடந்த 45 ஆண்டுகளில் 160 படங்கள் நடித்து விட்டேன். எல்லாவிதமான கதாபாத்திரங்களும் நடித்து விட்டேன். இருப்பினும், நடிக்க விரும்புகிற ஏதாவது ஒரு கதாபாத்திரம் உண்டென்றால், அது திருநங்கை கதாபாத்திரம்தான். ஆனால், இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
பொதுவாக, நான் மகிழ்ச்சியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறேன். போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்பது சீரியசானது. குற்றவாளிகளை துரத்த வேண்டும். எனவே, நான் அதை தவிர்த்து விடுவேன்.
ஆனால், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் அருமையான கதையுடன் வந்தார். இது, வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் அல்ல. அவர் என்னிடம் வித்தியாசமான நடிப்பை கொண்டு வந்துள்ளார். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.