தேசிய செய்திகள்

மிசோரம் முதல்–மந்திரியாக பதவி ஏற்ற சோரம் தங்காவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 40 இடங்களில் 26 தொகுதிகளை மிசோ தேசிய முன்னணி கைப்பற்றியது. அந்த முன்னணியின் தலைவரான சோரம் தங்கா முதல்மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் மாநில கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

சோரம் தங்காவை தொடர்ந்து 11 மந்திரிகளும் பதவியேற்றனர். இதில் ஒருவரான தன்லுயாவுக்கு துணை முதல்மந்திரி பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

மிசோரமில் 3வது முறையாக முதல்மந்திரியாகி இருக்கும் சோரம் தங்கா, ஏற்கனவே 1998 மற்றும் 2003ம் ஆண்டுகளிலும் மாநிலத்தின் முதல்மந்திரியாக பதவி வகித்தவர்.

இந்நிலையில், மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

"மிசோரம் முதல்-மந்திரி சோரம் தாங்காவிற்கு வாழ்த்துகள். அவரது பதவிக் காலங்களில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய வாழ்த்துகள். மக்களின் தேவையை அறிந்து நாட்டின் வளர்ச்சியை நோக்கி செயல்படுவோம்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.